சனி, 6 ஆகஸ்ட், 2016

12 ராசிகளுக்கான குருப்பெயர்ச்சிப் பரிகாரங்கள்

கிரகப்பெயர்ச்சிகளில் சனிப்பெயர்ச்சியும், குருப்பெயர்ச்சியும் மனிதர்களின் ஆவலைத் தூண்டுகின்ற ஒரு நிகழ்வுகளாகும். இதில் சனிப்பெயர்ச்சி கெடுபலன்களைத் தருமோ என்ற எதிர்பார்ப்பில் கவலையோடு ஒரு மனிதனால்
கவனிக்கப்பட்டாலும் குருப்பெயர்ச்சி என்பது நல்ல இடத்தில் அமர்ந்தால் நமக்கு நன்மைகள் நடக்குமே என்ற ஆவலைத் தூண்டும் விதமாகவே ஒருவரால் வரவேற்கப்படுகிறது. குருபகவான் அனைத்து நன்மைகளையும் உலகிற்கு வழங்குகின்ற சுபக்கிரகம் என்பதால் அவர் ஒருராசியை விட்டு இன்னொரு ராசிக்கு மாறுகின்ற பெயர்ச்சி அதிகமாகக் கவனிக்கப்பட்டு தனக்கு என்ன நன்மைகள் நடக்கும் என்று ஒருவரை எதிர்பார்க்க வைக்கிறது. குருபகவான் ஒவ்வொரு பெயர்ச்சியின் போதும் ஐந்து ராசிகளுக்கு சாதகமான அமைப்பில் இருப்பார். அந்த ஐந்திலும் மூன்று ராசிகளை தனது சுபப் பார்வையால் பார்வையிடுவார் என்பதால் ஒவ்வொரு வருடமும் மூன்று ராசிகளுக்கு மிகவும் மேன்மையான பலன்களை தருவார். இந்த வகையில் இந்த வருடம் ரிஷபம், மகரம், மீனம் ஆகிய ராசிகளுக்கு மிகுந்த நற்பலன்கள் இருக்கும். இவை தவிர்த்த இரண்டு ராசிகளுக்கு இரண்டு, பதினொன்று எனப்படும் பணத்தையும், லாபத்தையும் தரக்கூடிய அமைப்பில் இருப்பார் என்பதால் இரண்டு, பதினொன்றாமிடங்களில் அவர் அமரும் ராசிக்காரர்களுக்கு சுபப்பலன்கள் இருக்கும். இந்த அமைப்பில் இந்த வருடம் உள்ள சிம்மம் விருச்சிகம் ஆகிய ராசிகளுக்கு இதுவரை இருந்து வந்த சாதகமற்ற பலன்கள் நீங்கி நன்மைகள் நடக்க ஆரம்பிக்கும். மீதமிருக்கும் ஏழு ராசிகளில் ஒன்று, மூன்று, நான்கு, பத்து, பனிரெண்டு ஆகிய ராசிகளுக்கு மிதமான நற்பலன்களை குருபகவான் அருள்வார். இந்தப் பிரிவில் இந்த வருடம் கன்னி, கடகம், மிதுனம், தனுசு, துலாம் ஆகிய ராசிகள் அடங்கும். நிறைவாக ஆறு, எட்டு ஆகிய இடங்களுக்கு பெயர்ச்சியாகும் குருபகவானால் சாதகமான பலன்களைத் தர இயலாது. இம்முறை இப்பிரிவில் மேஷம், கும்பம் ஆகிய ராசிகள் வருகின்றன. இந்த இரண்டு ராசிகளுக்கும் குருபகவானின் நற்பலன்கள் சற்றுக் குறைவாகத்தான் இருக்கும். ஒரு கிரகப்பெயர்ச்சியின் பலன்கள் எப்படி இருந்தாலும் சாதகமற்ற பலன்கள் நடக்குமாயின் அவற்றை முறையான இறை பரிகாரங்களின் மூலம் தடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்று நம்முடைய மேலான தெய்வாம்சம் பொருந்திய ஞானிகள் நமக்கு போதித்திருக்கிறார்கள். உண்மையில் ஜோதிட சாஸ்திரத்திற்கே பரிகார சாஸ்திரம் என்றுதான் பெயர். ஜோதிடத்தின் மூல நோக்கமே சாதகமற்ற பலன்கள் நடக்கின்ற, நன்மைகள் நடக்காத காலங்களை ஒரு மனிதன் முன்கூட்டியே அறிந்து கொண்டு அவைகள் வராமல் தடுத்து அவற்றைத் தனக்கு சாதகமாக்கிக் கொண்டு வாழ்க்கையை ஜெயிக்க வேண்டும் என்பதுதான். ஒரு மனிதனுக்கு தன்னம்பிக்கையூட்டி அவனை முன்னேற்றுவதில் ஜோதிடம் பெரும்பங்கு வகிக்கிறது. நாளை முதல் நீ நன்றாக இருப்பாய், இருக்க வேண்டும், என்பதும் அதற்குரிய வழிமுறைகளைச் சொல்வதும்தான் ஜோதிடத்தின் அடிநாதமே தவிர இனிமேல் உன் வாழ்க்கை முடியப் போகிறது என்று சொல்வதற்கு அல்ல. ஒரு மனிதனின் எதிர்காலத்தை காட்டும் இந்த தெய்வீக சாஸ்திரத்தை பரம்பொருளுடன் தவம், தியானம் போன்ற மனம் ஒன்றிய நிலைகளில் தொடர்பு கொண்டு சாதாரண மனிதர்களாகிய நமக்குப் பெற்றுத் தந்த நமது ஞானிகளின் உண்மையான நோக்கமே எதிர்காலத்தில் உனக்கு வரும் சாதகமற்ற பலன்களை இறைவழிபாட்டின் மூலமாக முறையான பரிகாரங்களை மேற்கொண்டு ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட விதி என்பதை மாற்றியமைத்து சந்தோஷமாக வாழ்ந்து கொள் என்பதற்காகத்தான். ஒரு மனிதனின் வாழ்வை இறை பரிகாரங்கள் மூலம் மாற்றிக்கொள்ளலாம் என்பதற்காகத் தான் இங்கே நமக்கு ஞானிகளால் மார்கண்டேயன் கதை சொல்லப்பட்டது. பதினாறு வயதில் அற்பாயுளில் இறந்து போவதற்காக இங்கே அனுப்பப்பட்ட மார்க்கண்டேயன் எமன் வரும்போது சிவலிங்கத்தை பற்றிக் கொண்டதால் தீர்க்காயுள் கொண்டவனாக, என்றும் இறவாத சிரஞ்சீவியாக மாற்றப்பட்டான் என்று நமக்கு சுட்டிக்காட்டப்பட்டது. நமது மேலான இந்து மதத்தின் அத்தனை கதைகளுக்குள்ளும் ஒரு அற்புதமான தத்துவம் மறைந்திருக்கும் என்பதை நான் அடிக்கடி எழுதி வருகிறேன். அதன்படி காலன் வருகையில் லிங்க வடிவை மார்க்கண்டேயன் பற்றிக் கொண்டான் என்பதன் உள்ளர்த்தம் என்னவெனில் துன்பம் வரும் வேளையில் நீ இறைவனைப் பற்றிக் கொண்டால், அது உன் விதி எனப்படும் அந்தத் துன்பத்தை மாற்றியமைத்து, உன் வேதனைகளை நீக்கி, வாழ்க்கையை நேராக்கும் மற்றும் சீராகச் செல்ல வைக்கும் என்பதுதான். ஒரு கிரகத்தின் முறையான பரிகாரம் எனப்படுவது அந்தக் கிரகத்தின் ஸ்தலம், கிரக வாகனம், நிறம், சுவை, தான்யம், உலோகம், கல், குணம், ஹோரை மற்றும் அந்தக் கிரகம் சம்பந்தபட்ட ராசிகளின் பஞ்சபூதத் தத்துவத்தையும் அது இருக்கும் ராசிகளின் சரம், ஸ்திரம், உபயம் போன்ற நுணுக்கமான சூட்சுமங்கள் நிரம்பியது. முறையான பரிகார அமைப்பிற்கு உதவ வேண்டித்தான் மேலே நான் சொன்ன ஒருகிரகம் சம்பந்தப்பட்ட உயிருள்ள, உயிரற்ற அத்தனை விஷயங்களையும் ஆராய்ந்து ஞானிகள் நமக்குத் தெளிவாக்கினார்கள். உதாரணமாக கிரகங்களில் மிகப்பெரி யது குருபகவான். ஆகவே மண்ணில் வாழும் உயிர்களில் மிகப்பெரியதான யானை குருவின் வாகனமாக நமக்குச் சொல்லப்பட்டது. அதாவது குருவின் ஆதிக்கமும், நல்லதன்மைகளும் அந்த உயிரிடம் மேலோங்கி இருப்பது நமக்கு உணர்த்தப்பட்டது. சூரியன் ஒரு கிரகம் அல்ல. ஆனால் வானில் உள்ள நட்சத்திரமான சூரியனும் ஜோதிடத்தில் ஒரு கிரகமாகவே குறிப்பிடப்படுகிறது. எனவே ஜோதிடம் பொய் என்று பிரச்சாரம் செய்பவர்களுக்கு இந்த கிரக வாகன அமைப்பின் மூலமும் ஞானிகள் தெளிவான பதிலைச் சொல்லியிருக்கிறார்கள். ஒரு கிரகத்திற்கும், நட்சத்திரத்திற்கும் வித்தியாசம் தெரியாவிட்டால் நமது ஞானிகள் குருவை விட மிகப்பெரியதான சூரியனின் வாகனம்தான் யானை என்று நமக்குச் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் குருவின் வாகனம் யானை என்று கிரகம் மற்றும் நட்சத்திர ஆதிக்கம் அறிந்து வேறுபடுத்திச் சொன்னதிலேயே அவர்கள் கிரகமும், நட்சத்திரமும் ஒன்றல்ல. இரண்டும் மாறுபட்டவை என்பதை நமக்குத் தெளிவாகப் பிரித்தே இனம் காட்டியிருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம். ஆகவே கிரக இயக்கங்கள் எனப்படும் பெயர்ச்சிகளில் குருபகவான் நமக்கு சாதகமற்ற நிலைகளில் இயங்கும்போது குருவின் ஆற்றலை எப்போதும் தன்னிடம் அதிகமாக சேமித்து தன்னுள்ளே வைத்திருக்கும் யானை, மற்றும் குருவின் நிறமான மஞ்சள்நிறம் சம்பந்தப்பட்டவைகள், குருபகவானின் அருளாற்றல் நிரம்பிய ஆலங்குடி, தென்குடித்திட்டை, திருச்செந்தூர், பாடி திருவலிதாயம், போரூர் ராமனாதீஸ்வரர் திருக்கோவில்கள், ஏனைய குருஸ்தலங்கள், குருவின் இனிப்புச்சுவை சம்பந்தப்பட்டவைகள் போன்ற முறையான பரிகாரங்களைச் செய்து குருவின் உயிராற்றலை நாம் பெற்று நமது சாதகமற்ற பலன்களை நிச்சயமாக மாற்றிக் கொள்ளலாம். முறையான பரிகாரங்களை நாம் செய்து கொள்வதற்காகவே நமக்கு கிரகங்களின் வாகனம் உலோகம் நிறம் உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் ஞானிகளால் உணர்த்தப்பட்டன. புதனின் வாகனம் குதிரை என்றால் புதன் என்பவன் ஒரு தூதன், செய்திகளை எடுத்துச் செல்பவன், அஞ்சல்துறை சம்பந்தப்பட்டவன் என்பதால் அக்காலத்தில் செய்திகளை விரைவாக ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு சென்று சேர்க்க உதவிய இப்போதும் அந்த வேலையைச் செய்யும் குதிரை புதனின் வாகனமாக நமக்குச் சொல்லப்பட்டது. அதற்காக இப்போது அந்த வேலையைச் செய்யும் கார் ரயில் விமானம் போன்றவை புதனின் வாகனமாகுமா? என்ற குதர்க்கக் கேள்வி எழுப்பப்பட்டால் குதிரை உயிருள்ளது, பரம்பொருளால் படைக்கப்பட்டது. மேற்சொன்ன வாகனங்கள் உயிரற்றவை, மனிதனால் செய்யப்பட்டவை. ஒருபோதும் இரண்டும் ஒன்றாகாது